உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக
இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து,
எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது
விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார்.
அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு
விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ
இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட
சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள்
மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத
வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)
ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக எற்று
பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை.
உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும்,
அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும்,
அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும்
சிறப்புத் தன்மையாகும்.
No comments:
Post a Comment