மனிதன் ஒழுக்கமிக்கவனாக, நேர்மையாளனாக வாழ்வதற்கு மனக்கட்டுப்பாடு மிக அவசியமாகும். ஆனால் இன்றைய நவீன உலகில் மனக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று கூட தெரியாமல் வாழ்பவர்கள் பலர்.
மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்து பாவங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். மனக்கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இவ்வுலகிலும் நன்மை பெற்று மறுஉலகிலும் நாம் நன்மையை ஈட்டியிருக்க முடியும்.நாம் எதில் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கோபம்
உணர்வுகள் மிதிக்கப்படும் போது, உரிமைகள் பறிக்கப்படும் போது நியாயங்கள் மீறப்படும் போது ஆத்திரமும் கோபமும் ஆர்ப்பரித்து எழுவது இயற்கை தான். இது போன்ற காரணத்திற்கு மட்டும் தான் கோபம் வருகிறதா? இல்லை. இதுவல்லாத பல காரணங்களுக்காக நாம் எல்லை மீறிக் கோபப்படுகிறோம்.
ஒரு சிறிய வார்த்தைக்காகக் கோபப்பட்டு அதன் காரணமாக பகை உணர்வை மலை போல் உயர்த்தி விடுகிறோம். இதனால் அன்போடும் பாசத்தோடும் இருந்தவர்கள் பாம்பும் கீறியும் போல் மாறி விடுகிறார்கள். நல்ல நட்பு சிதறி, அன்புள்ளங்கள் தீக்கங்குகளாக மாறிவிடுகின்றன.
தேவையில்லாமல் கோபப்பட்டு பகை உணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அழகிய ஒரு போதனையை நபிகளார் கூறியுள்ளார்கள்.
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6114)
கோபம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய மனிதர்களும் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் விபரீதமான முடிவுக்குச் சென்று பின்னர் வருத்தப்படுவார்கள். இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் தான் என்றால் முதலில் கோபம் வரும் போது அதைத் தடுத்து நிறுத்தி சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.