[
பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல்
இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர்,
பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.] சிறுநீர்
கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான்
நீர்கக்டுப்பு. சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண்
இருப்பது, தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருப்பது.... போன்ற காரணங்களால்
நீர்க்கடுப்பு ஏற்படலாம். இது பச்சிளம் குழந்தைகளில் இருந்து முதியவர்கள்
வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னைதான். நாம்
உண்ணும் உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது
சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணிர் தேவை. போதுமான அளவு தண்ணிர்
குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி
அதிகமாகி நீர்க்கடுப்பு (Strangury) ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு நிறைய
தண்ணிர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின்
வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணிர் குடித்தும்
நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து
பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக் கூடாது. அப்படி
அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கண்ணுக்குத்
தெரியாத சின்னச் சின்ன விரிசல்கள் ஏற்பட்டு, அங்கிருக்கும் கிருமிகள் அந்த
விரிசல்கள் மூலமாக ரத்தத்தில கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே,
எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக்
காலத்திலேயே பெரியவர்கள்''ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே'' என்று சொன்னார்கள். சிலருக்கு
நீர்க்கடுப்பு போலவே நீர் எரிச்சலும் இருக்கும். பொதுவாக அனைவருக்கும்
சிறுநீர்ப்பாதை வழவழவென்று இருக்கும். உடலில் போதுமான நீர் இருக்கும்போது
அந்தப் பாதையில் சிறுநீர் எளிதாக பயணித்து வெளியே வந்து விடும்.
ஆனால்,
தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி,
அதிலுள்ள கழிவுகளும் படிமங்களும் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே
தங்கியும் விடும். இப்படி தங்கும் படிமங்களும் கழிவுகளும் கிருமிகள் அங்கே
தாக்குவதற்கு வசதியாக அமைந்து விடுவதுடன் அங்கிருக்கும் நரம்புகளைத்
தூண்டி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை
சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
சிறுநீர்
கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால்,
நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும். இதை சிறுநீர்த் தொற்று (யூரினரி
இன்ஃபெக்ஷன்) என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக
சுத்தம் செய்வது நல்லது.திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய
உறவின் காரணமாக நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக மலக்குடலில் இருந்து மலம்
வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய
உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள்
சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக
பிறப்புறுப்பை தண்ணிரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது.
சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே
சிறுநீர் வெளிவந்து விடும். சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள்
பலமிழந்து போவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன்,
பிறப்புறுப்பு இறங்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம்.
சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை
செய்வதன் மூலமும் சர்ஜரி மூலமும் இதை குணப்படுத்தி விடலாம்.
பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப்
பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு
நிலைக்குத் திரும்பாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பிரசவம்
முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை
பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச்
சரிசெய்து விடலாம்.
பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல்
இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர்,
பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் அருமையான நம் பாட்டி வைத்தியமுறை சிறுநீர் பெருக்கிகள், பிறகு இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் உங்களை அண்டவே அண்டாது.''